×

பழுதான பள்ளிக் கட்டிடங்களை இடிக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்: பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்

சென்னை: அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த கல்வி இன்ஜினியர்களால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் பள்ளிகளில் பழுதடைந்த, இடிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் இதர கட்டிட விவரங்கள் கண்டறியப்பட்டு அவை டி.என்.எஸ்.இ.டி. அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ச்சியாக பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க வேண்டிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளின் தற்போதைய நிலையினை அறிந்து கொள்ளவும்,அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, தலைமை ஆசிரியர்கள் கள ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்ட இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களின் விவரங்களை பார்த்து அதில் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டதா, இடிக்கப்பட்டு அகற்றப்பட்டதா என்ற விவரங்களையும், அதற்குரிய புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதலாக ஏதேனும் கட்டிடங்கள் இடிக்க வேண்டிய நிலையில் இருந்தால், அதுபற்றிய விவரங்களையும் பதிவேற்றம் செய்யலாம் எனவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் துரிதமாக செய்து முடிக்க, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

The post பழுதான பள்ளிக் கட்டிடங்களை இடிக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்: பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : School Education Department ,CHENNAI ,Integrated Education Engineers ,Higher Secondary ,TNSET ,Dinakaran ,
× RELATED பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி; தலைமை...